மாற்றுச்சாவி |
யாரும் |
யாருக்குள்ளும் |
நன்றாக இல்லை |
அடுத்தவனைப் பற்றிய தப்பெண்ணம் |
தப்பாக்குகிறது – |
அவனவனையும் |
முகம் சிரிக்கும் |
அகம் கறுக்கும் |
புத்தி கூறுபோடும். |
நெருங்கிவரக் கை கோர்க்கையில் |
விரல்கள் |
வேறுபாடு பேசும். |
கட்டிப்பிடித்துப் |
பாசம் பரிமாற |
மனசு குத்தும். |
சாதனையைப் பாராட்ட |
எத்தனிக்கும்போது |
பீறிட்டெழும் பொறாமை |
குரல்வளையை நெரிக்கும். |
பெரியவனாய் |
காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் எண்ணத்தில் |
மனிதச் சங்கிலி அறுபடும். |
நம்பிப் படகேற |
நட்டாற்றில் |
துடுப்பொடியும் |
எச்சரிக்கையாய் |
தெரிந்து வைத்துக்கொள் |
நீச்சல் |
எதற்கும் |
எல்லாவற்றுக்கும். |
—–சகாரா |
நன்றி: ‘முள்ளின் நுனியிலும் ஆகாயம்’ கவிதைத் தொகுப்பு |
Category Archives: கவிதை
மழை-8, துளி-17 : ஓ
ஓ -கைகாட்டி |
எல்லாம் முடிந்து |
ஏதுமற்ற உலகத்தில் |
என்னுடய அரசாட்சி |
நடத்தல் வேண்டும். |
உலகத்தின் புதிய விடியலை |
நானே தீர்மானிக்க வேண்டும். |
காற்றோ, நீரோ, மழையோ |
எதுவாயினும் |
என்னுடைய ஆணைக்குப் |
பணிதல் வேண்டும், |
என்னிலும் புத்திசாலி |
எவனுமில்லையென |
இறுமாந்திருந்தபோது |
கெக்கலித்து, |
சிறகடித்துப் போனதொரு காகம், |
தன் எச்சத்தை |
என் தலையில் இட்டபடி. |
மழை-8, துளி-16 : ஒரு சொட்டு ஏக்கம்
ஒரு சொட்டு ஏக்கம் – சகாரா |
எங்கு பார்த்தாலும் |
இனிப்பு, பழங்கள் |
ஈகோ- |
இரத்தத்தில் சர்க்கரை. |
எங்கு சென்றாலும் |
என் தாயின் தரிசனம் |
நான் |
ஏமாற்றத்தின் பிள்ளை. |
நல்லது |
கெட்டது |
வடிகட்டிய(வன்) |
முட்டாள் |
மண்டையைப் போட்டு |
உடைத்துக் கொண்டிருந்தபோது |
செத்தவனுக்கும் மூளை |
உயிரோடிருக்கையில் வாழவிடாதே |
செத்தபிறகு கொடு |
மரணத்துக்குப் பிந்தைய விருது |
ஈரமண் கிளறி |
படுத்ததும் தூங்கிப்போனது நாய். |
பக்கத்தில் |
பொறாமையோடு |
நான் |
நன்றி: ‘முள்ளின் நுனியிலும் ஆகாயம்’ கவிதைத் தொகுப்பு
மழை-8, துளி-14 : கருப்பை செய்யும் அம்மா
கருப்பை செய்யும் அம்மா
வெந்த கருப்பையை |
அம்மா கழற்றி வைத்திருந்தாள். |
நமுத்த விறகு |
ஊதலுக்காய்க் காத்திருந்தது. |
இட்லி எட்டணா, தோச ஒர்ருவா, |
பணியாரம் நாலணா… |
பள்ளிக்கூடத்துப் புள்ளய்ங்க வந்தாக்குடுன்னு |
சொல்லிவிட்டு |
அம்மா தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்தாள். |
முதன்முறையாக அடுப்பை ஊதினேன். |
அடிவயிறு பத்திக்கிட்டு எரியுதுடா என்ற |
அம்மாவின் குரல் ஞாபகம் |
என் அடிவயிறைப் பற்றச் செய்தது. |
மடியில் கிடத்தி, தலை வருடி |
உறங்கச் சொல்லிய இரவொன்றில் |
என்னைச் சுற்றி கருப்பை செய்துகொண்டிருந்தாள் |
அம்மா, |
உறங்காது விழித்தபடி. |
-முனி, திண்டுக்கல் |
நன்றி: ‘பயணம் புதிது’, ஜூலை-ஆகஸ்ட்-2006 |
மழை-8, துளி-13 : கூடு
கூடு – புலியூர் முருகேசன்
குறைப் பிள்ளையாய் |
தூக்கணாங்குருவி கட்டிய கூடு |
இங்குமங்கும் அலையும் |
வந்த குருவியின் அலகில் |
நாலைந்து காய்ந்த வைக்கோற் பிரியோ,புல்லோ |
நெல் கொத்தினாலும் |
நீர் குடித்தாலும் |
உயரப் பறந்தாலும் |
குருவிக்கு |
பொழுதுக்கும் குறையாய்க் கிடக்கும் |
கூட்டின் மேல் ஞாபகங்கள். |
எனவே… எங்கு எதன் மீது |
எந்த திசைமீது நின்றாலும், பறந்தாலும் |
கண்ணுக்குத் தெரிபவை |
காய்ந்த புற்களே! |