மழை-8, துளி-14 : கருப்பை செய்யும் அம்மா

 கருப்பை செய்யும் அம்மா

வெந்த கருப்பையை
அம்மா கழற்றி வைத்திருந்தாள்.
நமுத்த விறகு
ஊதலுக்காய்க் காத்திருந்தது.
இட்லி எட்டணா, தோச ஒர்ருவா,
பணியாரம் நாலணா…
பள்ளிக்கூடத்துப் புள்ளய்ங்க வந்தாக்குடுன்னு
சொல்லிவிட்டு
அம்மா தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்தாள்.
முதன்முறையாக அடுப்பை ஊதினேன்.
அடிவயிறு பத்திக்கிட்டு எரியுதுடா என்ற
அம்மாவின் குரல் ஞாபகம்
என் அடிவயிறைப் பற்றச் செய்தது.
மடியில் கிடத்தி, தலை வருடி
உறங்கச் சொல்லிய இரவொன்றில்
என்னைச் சுற்றி கருப்பை செய்துகொண்டிருந்தாள்
அம்மா,
உறங்காது விழித்தபடி.
-முனி, திண்டுக்கல்
நன்றி: ‘பயணம் புதிது’, ஜூலை-ஆகஸ்ட்-2006