மழை-7, துளி-8 : வெளியே வாருங்கள்

மழை-7, துளி-8

வெளியே வாருங்கள் – ம. ஜெயப்பிரகாஷ் வேல்

அந்த மலைவனத்தில்

நீங்கள் வெட்டிய முதல்மரம்

ஓர் ஓநாயின்மேல் விழுந்தது.

வெட்டுண்ட மரத்தின்

வேரைப் பறித்தபோது

ஒரு முயலின் குழியை மூடிவிட்டீர்கள்.

தரையைச் சமதளமாக்கும்போது

பாறைகளை உருட்டி

லைக்கன்களைப் புதைத்தீர்கள்.

நீங்கள் எழுப்பிய

தேயிலைச் செடிகளின் கசப்பில்

மான்களும் தடுமாறின.

நடுவே உங்களின் வீடுள்ள

குன்றில்தான்

முன்பு வரையாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

உங்களின் அசுரத்தனமான

ஆலைச் சங்கொலியில்

யானைகளும் தம் பிளிறலை மறந்தன.

வழியெங்கும் உங்கள்

வாகனங்களே வலம் வந்ததால்

சிறுத்தைகளும் புதர்களுக்குள் முடங்கின.

சிற்றாறுகளின் வழிகளை மாற்றினீர்கள்;

ஓடைகளின் பாடலை நிறுத்தினீர்கள்.

கானகத்தில் இருளை எழுதியவை

உங்களின் விரல்களே!

வெளிச்சம் வரட்டும்,

வெளியே வாருங்கள்!

(* லைக்கன் – மண்ணிற்கு வளமூட்டும் பூஞ்சை-பாசிகள் சேர்ந்த கூட்டுயிரி)

*நன்றி: பயணம் புதிது -ஜூலை-ஆகஸ்ட்-2006

Leave a comment