மழை-7, துளி-8
வெளியே வாருங்கள் – ம. ஜெயப்பிரகாஷ் வேல்
–
அந்த மலைவனத்தில்
நீங்கள் வெட்டிய முதல்மரம்
ஓர் ஓநாயின்மேல் விழுந்தது.
–
வெட்டுண்ட மரத்தின்
வேரைப் பறித்தபோது
ஒரு முயலின் குழியை மூடிவிட்டீர்கள்.
–
தரையைச் சமதளமாக்கும்போது
பாறைகளை உருட்டி
லைக்கன்களைப் புதைத்தீர்கள்.
–
நீங்கள் எழுப்பிய
தேயிலைச் செடிகளின் கசப்பில்
மான்களும் தடுமாறின.
–
நடுவே உங்களின் வீடுள்ள
குன்றில்தான்
முன்பு வரையாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
–
உங்களின் அசுரத்தனமான
ஆலைச் சங்கொலியில்
யானைகளும் தம் பிளிறலை மறந்தன.
–
வழியெங்கும் உங்கள்
வாகனங்களே வலம் வந்ததால்
சிறுத்தைகளும் புதர்களுக்குள் முடங்கின.
–
சிற்றாறுகளின் வழிகளை மாற்றினீர்கள்;
ஓடைகளின் பாடலை நிறுத்தினீர்கள்.
–
கானகத்தில் இருளை எழுதியவை
உங்களின் விரல்களே!
–
வெளிச்சம் வரட்டும்,
வெளியே வாருங்கள்!
–
(* லைக்கன் – மண்ணிற்கு வளமூட்டும் பூஞ்சை-பாசிகள் சேர்ந்த கூட்டுயிரி)
*நன்றி: பயணம் புதிது -ஜூலை-ஆகஸ்ட்-2006